சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
திருவிசைப்பா

Back to Top
திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
9.001   திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

9.001 திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே   (கோயில் (சிதம்பரம்) )
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
   உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
   சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
   அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
   தொண்டனேன் விளம்புமா விளம்பே.

[1]
இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்
   இருட்பிழம் பறஎறிந் தெழுந்த
சுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந்
   தூயநற் சோதியுட் சோதீ
அடல்விடைப் பாகா அம்பலக் கூத்தா
   அயனொடு மால்அறி யாமைப்
படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
   தொண்டனேன் பணியுமா பணியே.

[2]
தற்பரம் பொருளே சசிகண்ட சிகண்டா
   சாமகண் டா அண்ட வாணா
நற்பெரும் பொருளாய் உரைகலந் துன்னை
   என்னுடைய நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத் தளவிலா உன்னைத்
   தந்தபொன் னம்பலத் தரசே
கற்பமாய் உலகாய் அல்லைஆ னாயைத்
   தொண்டனேன் கருதுமா கருதே.

[3]
பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என்
   பிறப்பிறப் பறுத்தபே ரொளியே
கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்
   மகள்உமை யவள்களை கண்ணே
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
   அப்பனே அம்பலத் தமுதே
ஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத்
   தொண்டனேன் உரைக்குமா றுரையே.

[4]
கோலமே மேலை வானவர் கோவே
   குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
   காலகாலா காம நாசா
ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்
   கோயில்கொண் டாடவல் லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
   தொண்டனேன் நணுகுமா நணுகே.

[5]
நீறணி பவளக் குன்றமே நின்ற
   நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவன போகமே யோக
   வெள்ளமே மேருவில் வீரா
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா
   அம்பொன்செய் அம்பலத் தரசே
ஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத்
   தொண்டனேன் இசையுமா றிசைய.

[6]
தனதன்நற் றோழா சங்கரா சூல
   பாணியே தாணுவே சிவனே
கனகநற் றூணே கற்பகக் கொழுந்தே
   கண்கள்மூன் றுடையதோர் கரும்பே
அனகனே குமர விநாயக சனக
   அம்பலத் தமரர்சே கரனே
நுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத்
   தொண்டனேன் நுகருமா நுகரே.

[7]
திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே
   திகைக்கின்றேன் றனைத்திகை யாமே
நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்
   நிகழ்வித்த நிகரிலா மணியே
அறம்பல திறங்கண் டருந்தவர்க் கரசாய்
   ஆலின்கீழ் இருந்தஅம் பலவா
புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்
   தொண்டனேன் புணருமா புணரே

[8]
தக்கன்நற் றலையும் எச்சன்வன் றலையும்
   தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண் டுருள ஒண்டிருப் புருவம்
   நெறித்தரு ளியஉருத் திரனே
அக்கணி புலித்தோ லாடைமேல் ஆட
   ஆடப்பொன் னம்பலத் தாடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத்
   தொண்டனேன் தொடருமா தொடரே.

[9]
மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்
   கருள்புரி வள்ளலே மருளார்
இடங்கொள்முப் புரம்வெந் தவியவை திகத்தேர்
   ஏறிய ஏறுசே வகனே
அடங்கவல் லரக்கன் அரட்டிரு வரைக்கீழ்
   அடர்த்தபொன் னம்பலத் தரசே
விடங்கொள்கண் டத்தெம் விடங்கனே உன்னைத்
   தொண்டனேன் விரும்புமா விரும்பே.?

[10]
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டா
   தயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட் டோர்வரி யாயை
   மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
   சிறுமையிற் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே உன்னைத்
   தொண்டனேன் நினையுமா நினையே.?

[11]

Back to Top
திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
9.002   திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உயர்கொடி யாடை மிடைபட லத்தின்
   ஓமதூ மப்பட லத்தின்
பியர்நெடு மாடத் தகிற்புகைப் படலம்
   பெருகிய பெரும்பற்றப் புலியூர்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
   நிறைந்தசிற் றம்பலக் கூத்தா
மயரறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
   வடிகள் என் மனத்துவைத் தருளே.
 
[1]
கருவளர் மேகத் தகடுதோய் மகுடக்
   கனகமா ளிகைகலந் தெங்கும்
பெருவள முத்தீ நான்மறைத் தொழிலால்
   எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவிதி நிதியந்
   திரண்டசிற் றம்பலக் கூத்தா
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்
   உன்அடிக் கீழதென் உயிரே.

[2]
வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம்
   கரும்பொடு மாந்திடு மேதி
பிரம்பிரி செந்நெற் கழனிச்செங் கழுநீர்ப்
   பழனஞ்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்
சிரம்புரை முடிவா னவர்அடி முறையால்
   இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
   நினைந்துநின் றொழிந்ததென் நெஞ்சே.
 

[3]
தேர்மலி விழவிற் குழலொலி, தெருவில்
கூத்தொலி, ஏத்தொலி, ஓத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில விலயத் திருநடத் தியல்பிற்
றிகழ்ந்தசிற் றம்பலக் கூத்தா
வார்மலி முலையாள் வருடிய திரள்மா
மணிக்குறங் கடைந்ததென் மதியே.

[4]
நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்(கு)
இளங்கமுகு உளங்கொள்நீள் பலமாப்
பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதணம்
முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்
சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த
செம்பொற் சிற்றம்பலக் கூத்தா !
பொறை யணி நிதம்பப் புலியதள் ஆடைக்
கச்சுநூல் புகுந்ததென் புகலே.

[5]
அதுமதி இதுவென்(று) அலந்தலை நூல்கற்(று)
அழைப்பொழிந்(து) அருமறை அறிந்து
பிதுமதி வழிநின்(று) ஒழிவிலா வேள்விப்
பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்
செதுமதிச் சமணும் தேரரும் சேராச்
செல்வச் சிற்றம்பலக் கூத்தா !
மதுமதி வெள்ளத் திருவயிற்(று) உந்தி
வளைப்புண்(டு)என் னுள்மகிழ்ந் ததுவே.

[6]
பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்
பொடியணி பூணநூல் அகலம்
பெருவரை புரைதிண் தோளுடன் காணப்
பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்
திருமரு(வு) உதரத் தார்திசை யடைப்ப
நடஞ்செய்சிற் றம்பலக் கூத்தா !
உருமரு(வு) உதரத் தனிவடம் தொடர்ந்து
கிடந்த(து)என் உணர்வுணர்ந்(து) உணர்ந்தே.

[7]
கணியெரி விசிறு கரம்துடி விடவாய்க்
கங்கணம் செங்கைமற் றபயம்
பிணிகெட இவைகண்(டு) உன்பெரு நடத்திற்
பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்
திணிமணி நீல கண்டத்(து)என் அமுதே !
சீர்கொள்சிற் றம்பலக் கூத்தா !
அணிமணி முறுவல் பவளவாய்ச் செய்ய
சோதியுள் அடங்கிற்(று)என் அறிவே.

[8]
திருநெடு மால்இந் திரன்அயன் வானோர்
திருக்கடைக் காவலின் நெருக்கிப்
பெருமுடி மோதி உகுமணி முன்றில்
பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லின்முப் புரம்தீ
விரித்தசிற் றம்பலக் கூத்தா !
கருவடி குழைக்கா(து) அமலச்செங் கமல
மலர்முகம் கலந்த(து)என் கருத்தே.

[9]
ஏர்கொள்கற் பகம்ஒத்(து) இருசிலைப் புருவம்
பெருந்தடங் கண்கள்மூன் றுடையுன்
பேர்கள்ஆ யிரம்நூறாயிரம் பிதற்றும்
பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்கொள் கொக் கிறகும் கொன்றையும் துன்று
சென்னிச் சிற்றம்பலக் கூத்தா !
நீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம்
நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே.

[10]
காமனைக் காலன் தக்கன்மிக் கெச்சன்
படக்கடைக் கணித்தவன் அல்லாப்
பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்
தொண்டனேன் பெரும்பற்றப் புலியூர்ச்
சேமநற் றில்லை வட்டங்கொண்(டு) ஆண்ட
செல்வச்சிற் றம்பலக் கூத்தா !
பூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள்
பொறுப்பர்என் புன்சொலின் பொருளே.

[11]

Back to Top
திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
9.003   திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உறவா கியயோ கமும்போ கமுமாய்
   உயிராளீ என்னும்என் பொன்ஒருநாள்
சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
   சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
மறவா என் னும் மணி நீரருவி
   மகேந்திர மாமலை மேல்உறையும்
குறவா என் னும் குணக் குன்றே என்னும்
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

[1]
காடாடு பல்கணம் சூழக் கேழற்
   கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
வேடா மகேந்திர வெற்பா என்னும்
   வினையேன் மடந்தைவிம் மாவெருவும்
சேடா என் னும் செல்வர்மூவாயிரர்
   செழுஞ்சோதிஅந்தணர் செங்கைதொழும்
கோடா என் னும் குணக் குன்றே என்னும்
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

[2]
கானே வருமுரண் ஏனம் எய்த
   களி ஆர் புளினநற் காளாய் என்னும்
வானே தடவு நெடுங் குடுமி
   மகேந்திர மாமலைமேல் இருந்த
தேனே என்னும் தெய்வ வாய்மொழியார்
   திருவாளர் மூவா யிரவர் தெய்வக்
கோனே என் னும் குணக் குன்றே என்னும்
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

[3]
வெறியேறு பன்றிப்பின் சென்றொருநாள்
   விசயற் கருள்செய்த வேந்தே என்னும்
மறியேறு சாரல் மகேந்திரமா
   மலைமேல் இருந்த மருந்தே என்னும்
நெறியே என்னும் நெறிநின்றவர்கள்
   நினைக்கின்ற நீதிவே தாந்தநிலைக்
குறியே என் னும் குணக் குன்றே என்னும்
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

[4]
செழுந் தென்றல் அன்றில் இத் திங்கள் கங்குல்
   திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்தின்றென் மேற்பகை யாடவாடும்
   எனைநீ நலிவதென் என்னே என்னும்
அழுந்தா மகேந்திரத் தந்தரப்புட்
   கரசுக் கரசே அமரர்தனிக்
கொழுந்தே என்னும் குணக் குன்றே என்னும்
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

[5]
வண்டார் குழல்உமை நங்கை முன்னே
   மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்
கண்டார் கவலவில் லாடி வேடர்
   கடிநா யுடன்கை வளைந்தாய் என்னும்
பண்டாய மலரயன் தக்கன் எச்சன்
   பகலோன் தலை பல்ப சுங்கண்
கொண்டாய் என் னும் குணக் குன்றே என்னும்
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

[6]
கடுப்பாய்ப் பறைகறங் கக்கடுவெஞ்
   சிலையும் கணையும் கவணும் கைக்கொண்
டுடுப்பாய தோல் செருப் புச்சுரிகை
   வராகம்முன் ஓடு விளிஉளைப்ப
நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்
   தரையாஎன் பார்க்குநா தாந்தபதம்
கொடுப்பாய் என் னும் குணக் குன்றே என்னும்
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

[7]
சேவேந்து வெல்கொடி யானே என்னும்
   சிவனே என்சேமத் துணையே என்னும்மாவேந்து சாரல் மகேந்திரத்தின்
   வளர்நாய கா இங்கே வாராய் என்னும்
பூவேந்தி மூவா யிரவர் தொழப்
   புகழேந்து மன்று பொலிய நின்ற
கோவே என் னும் குணக் குன்றே என்னும்
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

[8]
தரவார் புனம்சுனைத் தாழ் அருவி

[9]

Back to Top
திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
9.004   திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
இணங்கிலா ஈசன் நேசத்
   திருந்தசித் தத்தி னேற்கு
மணங்கொள்சீர்த் தில்லை வாணன்
   மணவடி யார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறில்
   கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்களைக் காணா கண் வாய்
   பேசாதப் பேய்க ளோடே.

[1]
எட்டுரு விரவி என்னை
   ஆண்டவன் ஈண்டு சோதி
விட்டிலங் கலங்கல் தில்லை
   வேந்தனைச் சேர்ந்தி லாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத்
   தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண் வாய்
   பேசாதப் பேய்க ளோடே. 

[2]
அருட்டிரட் செம்பொற் சோதி
   யம்பலத் தாடு கின்ற
இருட்டிரட் கண்டத் தெம்மான்
   இன்பருக் கன்பு செய்யா
அரட்டரை அரட்டுப் பேசும்
   அழுக்கரைக் கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்வாய்
   பேசாதப் பேய்க ளோடே.

[3]
துணுக்கென அயனும் மாலும்
   தொடர்வருஞ் சுடராய் இப்பால்
அணுக்கருக் கணிய செம்பொன்
   அம்பலத் தாடிக் கல்லாச்
சிணுக்கரைச் செத்தற் கொத்தைச்
   சிதம்பரைச் சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்வாய்
   பேசாதப் பேய்க ளோடே. 

[4]
திசைக்குமிக் குலவு கீர்த்தித்
   தில்லைக்கூத் துகந்து தீய
நசிக்கவெண் ணீற தாடும்
   நமர்களை நணுகா நாய்கள்
அசிக்கஆ ரியங்கள் ஓதும்
   ஆதரைப் பேத வாதப்
பிசுக்கரைக் காணா கண்வாய்
   பேசாதப் பேய்க ளோடே. 

[5]
ஆடர வாட ஆடும்
   அம்பலத் தமுதே என்னும்
சேடர்சே வடிகள் சூடாத்
   திருவிலா உருவி னாரைச்
சாடரைச் சாட்கை மோடச்
   சழக்கரைப் பிழைக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண்வாய்
   பேசாதப் பேய்க ளோடே. 

[6]
உருக்கிஎன் உள்ளத் துள்ளே
   ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப் பருளுந் தில்லைச்
   செல்வன்பால் செல்லுஞ் செல்வில்
அருக்கரை அள்ளல் வாய
   கள்ளரை அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண்வாய்
   பேசாதப் பேய்க ளோடே. 

[7]
செக்கர்ஒத் திரவி நூறா
   யிரத்திரள் ஒப்பாந் தில்லைச்
சொக்கர்அம் பலவர் என்னும்
   சுருதியைக் கருத மாட்டா
எக்கரைக் குண்டாம் மிண்ட
   எத்தரைப் புத்த ராதிப்
பொக்கரைக் காணா கண்வாய்
   பேசாதப் பேய்க ளோடே. 

[8]
எச்சனைத் தலையைக் கொண்டு
   செண்டடித் திடபம் ஏறி
அச்சங்கொண் டமரர் ஓட
   நின்றஅம் பலவற் கல்லாக்
கச்சரைக் கல்லாப் பொல்லாக்
   கயவரைப் பசுநூல் கற்கும்
பிச்சரைக் காணா கண்வாய்
   பேசாதப் பேய்க ளோடே.

[9]
விண்ணவர் மகுட கோடி
   மிடைந்தொளி மணிகள் வீசும்
அண்ணல்அம் பலவன் கொற்ற
   வாசலுக் காசை யில்லாத்
தெண்ணரைத் தெருளா உள்ளத்
   திருளரைத் திட்டை முட்டைப்
பெண்ணரைக் காணா கண்வாய்
   பேசாதப் பேய்க ளோடே. 

[10]
சிறப்புடை அடியார் தில்லைச்
   செம்பொன்அம் பலவற் காளாம்
உறைப்புடை அடியார் கீழ்க்கீழ்
   உறைப்பர்சே வடிநீ றாடார்
இறப்பொடு பிறப்பி னுக்கே
   இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பரைக் காணா கண்வாய்
   பேசாதப் பேய்க ளோடே. 

[11]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool